நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (17) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
நல்லூர், கோவில் வீதியில் அமைந்துள்ள அங்கஜனது அலுவலகத்தக்கு தன்னை அழைத்து, அவருடன் இணைந்து செயற்படவில்லையெனவும், இதனால் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரி, அங்கஜன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அகிலதாஸ் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமையடுத்து, அவரது வடமாகாண சபை உறுப்பினர் பதவிக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அடுத்த நிலையிலிருந்த அகிலதாஸ் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.