வடமாகாணசபையின் அனுமதியின்றி மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் ஜெனீவா அமர்வுகளில் மாகாணசபையின் சார்பாக கலந்து கொள்ள முடியாது என தெரிவித்திருக்கும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தேவை இருப்பின் தனிப்பட்ட முறையில் ஜெனீவா அமர்வுகளில் பங்கெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் 14 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் மாகாணசபை சார்பில் உறுப்பினர்கள் குழு பங்கேற்குமா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரையில் மாகாணசபை உறுப்பினர்கள் எவரினதும் விண்ணப்பம் கிடைக்கப் பெறவில்லை என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு மாகாணசபை என்பது அங்கீகாரம் பெற்ற அமைப்பு அல்ல அவ்வாறு மாகாணசபை உறுப்பினர்கள் அங்கு செல்ல விரும்பினால் அவர்கள் தனிப்பட்ட விருப்பில் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.