சக்கோட்டை தெற்கு மற்றும் இன்பர்சிட்டி கிராமங்களுக்கு குடிநீரைப் பெற்றுத்தருவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை இன்பர்சிட்டி கிராம அபிவிருத்தி சனசமூக நிலைய பொது நோக்கு மண்டபத்தில், மக்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் சனிக்கிழமை (27) கலந்துரையாடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் எல்லை தாண்டியதுமான தொழில் நடவடிக்கைகளால், வடமராட்சி கடற்றொழிலாளர்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதை நான் நன்கறிவேன்.
இவ்வாறு எமது கடற்றொழிலாளர்களின் இழப்புகளுக்கும் பாதிப்புகளுக்கும் கடந்தகால எமது அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களே காரணமாக அமைந்துள்ளது.
இருந்த போதிலும் இணக்க அரசியல் ஊடானதும் அரசுடனான நல்லுறவையும் பயன்படுத்திக் கொண்டு எமது பகுதிகளை அபிவிருத்தியால் கட்டியெழுப்பும் அதேவேளை, எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் செயற்றிட்டங்களை செயற்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இன்பர்சிட்டி கடற்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள வான் அகழ்வுப் பணிகளுக்காக ஒரு மில்லியன் ரூபாயை ஒதுக்கி தருவதாக அமைச்சர் உறுதியளித்ததுடன் இறங்கு துறைக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.