அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் சொத்தழிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை (19), யாழ்ப்பாணம், முல்லைத்தீவுமற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த கடையடைப்புப் போராட்டத்திற்கான அழைப்பினை முஸ்லிம் உரிமைக்கான அமைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்றைய நாள் முழுதும் யாழ்ப்பாணம் மற்றும் வலுனியாவிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, அமைதியான முறையில் தமது கண்டனத்தினைத் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எவ்வாறாயினும், குறித்த மாவட்டங்களிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் வழமை போன்று இயங்கி வருகின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா முஸ்லிம் வர்த்தகர் சங்கம், ‘அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இந்த தாக்குதல் சம்பவமானது, நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என அச்சங்கம் கூறியது.