கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்றய தினம் நடைபெற்ற டிப்ளோமா ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் 235 டிப்ளோமா ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனப் பத்திரங்களை அமைச்சர், ஆளுநர் உள்ளிட்டோர் வழங்கி வைத்தனர்.
இதன்போது தகவல்தொழில்நுட்பம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்குரிய தமிழ், சிங்கள மொழி மூல டிப்ளோமாதாரிகளும், உடற்கல்வி தமிழ் மொழி மூல டிப்ளோமாதாரிகளும் நியமனங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதில் 28 பட்டதாரிகள் சிங்கள மொழி மூல பட்டதாரிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.
இதனிடையே வடமாகாணத்தின் கல்வித்துறை மேம்பாட்டிற்காக அண்மையில் 247 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செல்வராசா ஆகியோரும் உடனிருந்தனர்.