ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்; வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை – அர்சுனா இராமநாதன்

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் மாத்திரம் 2ஆயிரம் டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். பட்டப்பின் படிப்பு பயிலுனர்களுக்காவது அரசாங்கம் ஏதாவது ஒரு விடயத்தை செய்திருக்க வேண்டும்.

அதேபோன்று வடக்கு கிழக்கு மீனவர் தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் எதுவும் இல்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு மீனவர்கள் இந்திய மீனவர்களின் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். அதற்கு எந்த தீர்வும் இதில் இல்லை.

மேலும் யாழ் மாவட்ட உறுப்பினர் என்றவகையில் வரவு செலவு திட்டத்தை வரவேற்கிறேன். ஏனெனில் யாழ்ப்பாண நூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வட்டுவாக்கல் பாலத்தை புனரமைக்க 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாகாண பாதைகளை செப்பனிடுவதற்கு 500 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்கு வருகை தந்து, நாங்கள் அங்கு முன்வைத்த பல விடயங்களை ஏற்றுக்கொண்டிருந்தார். அதன் பிரகாரம் எமது கோரிக்கைக்கமைய யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

Related Posts