Ad Widget

பங்காளிக் கட்சிகளுக்கு சுமந்திரன் விடுத்துள்ள சவால்!

தமிழரசுக் கட்சியுடன் பங்காளி கட்சிகள் இணைய விரும்பாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியாக தனித்து களமிறங்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A, சுமந்திரன் தொிவித்துள்ளாா்.

மன்னாரில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசுக் கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம்.

அழைப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனித்து தேர்தலை எதிர்கொள்வோம்.

நாங்கள் அண்மையில் எமது தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்தினடிப்படையில், ஏற்கனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் அனைவரையும் கட்சிக்கு வருமாறு இலங்கை தமிழரசு கட்சியால் அழைப்பு விடுக்கப்பட்டது.

அத்துடன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பெயரிலும் தமிழரசு கட்சியின் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அழைப்பு விடுப்பதாக தீர்மானித்து இருந்தோம்.

அப்படி அவர்கள் வரா விட்டால் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம்.

ஆகவே நியமனப் பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப்படுத்த வேண்டும்.

வெகு விரைவில் அன்று நாங்கள் நியமித்த நியமன குழு கூடி அவர்கள் இணங்கி வரவில்லை என்றால் அவற்றைக் கருத்தில் எடுத்து தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம்.

எதிர்வரும் தேர்தலில் இளைஞர்கள் யுவதிகள் ஆற்றல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுடன், ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம்” என்றும் M.A, சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

Related Posts