Ad Widget

9 இந்திய மீனவர்கள் கைது!

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்துள்ளது.

மேலும் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீன்பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி சேதம் அடைந்து படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடல் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக வீசி வந்த சூறைக்காற்று காரணமாக மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று (22) கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 430 விசைப்படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் இன்று(23) அதிகாலை சுமார் 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஈசாக்கு ராபின் மற்றும் செல்வகுமார் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசை படகையும் அதிலிருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து காங்கேசன்துறை கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி பின் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைக்கு பின் மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நேற்று நள்ளிரவு ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் நாலாபுறமும் சிதறி ஓடிய உள்ளனர்.

மேலும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அந்தோணி தாஸ் என்பவரின் படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி கடுமையாக சேதம் அடைந்ததை அடுத்து படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரை வந்து சேர்ந்தனர்.

இலங்கை கடற்படை தொடர் விரட்டியடிப்பு காரணமாக படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை நஷ்டத்துடன் கரை திரும்பி உள்ளனர்.

சூறைக்காற்று காரணமாக 5 நாட்களுக்கு பின் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கை கடற்படை மற்றும் மத்திய அரசை கண்டித்து கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி படகு சேதமடைந்து இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எனவே உடனடியாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Posts