Ad Widget

நோயாளிகளை விட்டு ஓடிய வைத்தியர்கள் தமது பிள்ளைக்கு என்றால் செல்வார்களா?

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை விடுதியில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை கருத்தில் கொள்ளாது தமது சுகபோகங்களை அனுபவிப்பதற்காக வைத்தியசாலையை விட்டு ஓடிச் சென்ற வைத்தியர்களை எவ்வாறு மக்கள் நம்புவது என போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

திங்கட்கிழமை (08) சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனாவை மாற்றக்கூடாது மற்றும் வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர், தமது சிறிய வயது காலத்தில் இருந்து இந்த வைத்தியசாலையை பயன்படுத்தி வருகிறோம்.

இங்கு வைத்தியர்கள் சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் இருப்பது தற்போதைய வைத்தியர் அர்சுனா வெளிப்படுத்தியதன் மூலம் நாம் அறிந்து கொண்டோம்.

நாங்கள் சிகிச்சைக்கு வரும்போது வைத்தியர் இல்லை என பலமுறை திரும்பிச் சென்றிருக்கின்றோம் ஆனால் இங்கு இருபதுக்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இருக்கும் விடயம் தற்போது தான் எமது மக்களுக்கு தெரியவந்தது.

இங்கு கடமையாற்றும் வைத்தியர்கள் பலர் வைத்தியசாலைக்கு வராது வீடுகளிலும் தனியார் வைத்திய சாலைகளிலும் கடமையாற்றுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் சிலர் கடவுளுக்கு நிகராக வைத்திய துறையை கருதி சேவை செய்து வரும் நிலையில் சிலர் அவர்களையும் குழப்பி தமது நிகழ்ச்சி நிரலின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று நாட்களாக வைத்தியர்கள் குறித்த வைத்திய சாலையை விட்டு வெளியேறச் சென்று இருக்கிறார்கள் அவர்களுடன் வைத்தியசாலையை விட்டுச் செல்ல விருப்பமில்லாத வைத்தியர்களும் நிர்பந்தத்தின் அடிப்படையில் சென்றிருப்பதை நாம் அறிகிறோம்.

வைத்தியர் ஒருவர் வைத்திய சாலையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பில் வெளிப்படுத்தியதற்காக ஏழை நோயாளிகளை கைவிட்டு விட்டு சென்ற வைத்தியர்கள் தமது பிள்ளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் போராட்டம் என கூறி வெளியேறிச் செல்வீர்களா என குறித்த பெண் கேள்வி எழுப்பினார்.

Related Posts