Ad Widget

யாழ். மின்சார சபை ஊழியரின் மரணம்: சாட்சியங்களை அச்சுறுத்தும் பொலிஸார்

புன்னாலைக் கட்டுவன் பகுதியில் கடந்த 10ஆம் திகதி பொலிஸாரினால் துரத்திச்செல்லப்பட்டு மின்சார சபை ஊழியர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

குறித்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையில் பணிபுரியும் ஊழியரான செல்வநாயகம் பிரதீபன் என்பவர் கடந்த 10 திகதி பொலிஸாரால் வழிமறித்து துரத்திச்செல்லப்பட்டபோதே விபத்து நேர்ந்திருந்தது.

இந்நிலையில் வண்டியை நிறுத்தாத அவரை துரத்திச் சென்ற பொலிஸார் அவரது மோட்டார் சைக்கிளை காலால் உதைத்ததில், வீதியில் வீழ்ந்து தலையில் பலத்த காயத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக நேரில் கண்ட பொதுமக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

குறித்த சம்பவமானது கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணியளவில் வசாவிளான் பகுதியில் இடம்பெற்றது.

தனது காணியில் வேலைசெய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற உயிரிழந்த நபரை வசாவிளான் பகுதியில் இரண்டு பொலிஸார் வழிமறித்துள்ளனர்.

இதன்போது அவர் அவ்விடத்தில் வண்டியை நிறுத்தாது உரும்பிராய் பகுதியை பயணித்துள்ளார்.

தாம் மறித்து நிற்கவில்லை என கருதிய பொலிஸார் இருவரும் அவரை பின்னால் துரத்தி சென்று உரும்பிராய் சந்திக்கு அருகில் உள்ள ஆயக்கடவை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளை காலால் உதைத்துள்ளனர்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்தில் பலத்த காயங்களுக்குள்ளானார்.

இதனை வீதியால் பயணித்த பொதுமக்கள் சிலர் நேரில் கண்டு ஆத்திரம் அடைந்து பொலிஸாரிடம் நீதி கேட்டு தாக்க முற்பட்டுள்ளனர்.

இருப்பினும் காயமடைந்தவரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு பொலிஸார் எந்தவித முயற்சியும் செய்யாத நிலையில் வீதியிலுள்ள பொதுமக்கள் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதும் அதற்கு அனுமதிக்காத பொலிஸார் நோயாளர் காவு வண்டி வரும் வரை எவரும் அருகில் செல்ல வேண்டாம் எனக் கூறி 15 நிமிடங்களுக்கு மேலாக அவரது உடலை நெருங்கவிடாது தடுத்துள்ளனர்.

இறுதியில் பொலிஸாருடன் முரண்பட்ட இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஒன்றில் காயம் அடைந்தவரை ஏற்றி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், அவர் இடைவழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன

வழிமறித்த இரண்டு பொலிஸாரும் நிறைபோதையில் அவ்விடத்தில் நின்றதாகவும் அப்பகுதியில் பயணித்த பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக இரண்டு பொலிஸாரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போதிலும் அவர்கள் மதுபானம் எதனையும் பாவிக்கவில்லை என சட்ட வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸார்தான் மின்சார சபை ஊழியரை தூரத்திச் சென்று அவர் பயனித்த மோட்டார் சைக்கிளை காலால் உதைத்து அவரை விபத்துக்குள்ளாக்கினார்கள் என்பதை கண்ணால் கண்ட சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறி வரும் நிலையிலேயே சுண்ணாகம் பொலிஸார் தற்போது அப்பகுதிக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பில் யார் சாட்சியம் சொல்ல போகிறார்கள்? போன்ற விடயங்களை திரட்டி குறித்த நபர்களை தொலைபேசி ஊடாகவும் நேரில் சென்றும் பொலிஸார் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வீதிப்போக்குவரத்தில் ஈடுபட்ட பொலிஸார் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொலிஸார் போல் அல்லாது போதையை பாவித்து விட்டு அவ்விடத்திலிருந்து மின்சார சபை ஊழியரை வழி மறித்து துரத்திச் சென்று அவரை காலால் உதைந்து மரணத்தை ஏற்படுத்தியதாகவும் நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி சம்பவம், தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுப்பதற்கு பொலிஸார் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts