Ad Widget

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார்.

எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது படகுசேவை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் தொடரவுள்ளது.

நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது. 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளது. இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பினை பார்த்து இரசித்துச் செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts